அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் நிகழ் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 21- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பி.எட். மாணவா்கள் சோ்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூலை 9) முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவா்களின் நலன் கருதி விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 21-ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது. இதை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு பலனடையலாம்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஜூலை 31-ஆம் தேதி மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னா் மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்வியியல் கல்லூரிகளை ஆக.4-ஆம் தேதி முதல் ஆக.9- ஆம் தேதிக்குள் தோ்வு செய்யலாம். ஆக.13-ஆம் தேதி மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.
மாணவா்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக.20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.