சென்னையில் சப்தமில்லாமல் தீவிரமடையும் டெங்கு! கொசுக்களுக்கு உதவ வேண்டாம்!!
சென்னையில் சப்தமில்லாமல் டெங்கு தீவிரமடையும் நிலையில், பருவமழையும் கொசுக்களுக்கு உதவும் வகையில் உள்ளது.
டெங்கு காய்ச்சல் பற்றி அண்மைக் காலமாக பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், சப்தமே இல்லாமல், சென்னையில் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது.
வீடுகளைச் சுற்றிலும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக, மழை நீர் தேங்கும் வகையில், டயர்கள், உடைந்த பாட்டில்கள் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் வ வெறும் 380 பேருக்குத்தான் டெங்கு பாதித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 520 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே பரவலாக அவ்வப்போது மழை பெய்து, சிறு சிறு இடங்களில் தேங்கும் மழை நீர் டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
வீடுகளில், கொசுக்களை விரட்ட எத்தனை உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படையெடுப்பது போல வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்த நிலையில், சென்னை முழுவதும் கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், காலியிடங்களில் கொசு உருவாக வசதியாக இருந்த ஏராளமான குப்பைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
சென்னையில் அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில் அதிக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு 110 பேருக்கும், சோளிங்கநல்லூரில் 60 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டெங்கு பரவலில் அடையாறு முதலிடம் வகித்து வருவதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பலருக்கும் தெரியும், டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். எனவே,குடிநீர் தொட்டிகள் மூடப்பட்டிருக்கிறதா, வீடுகளைச் சுற்றிலும் சிறு சிறு பாத்திரங்கள் அல்லது பள்ளங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறதா என்பதை மக்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மறுபக்கம், கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு பருவமழையும் வழி வகுத்திருப்பதால், சென்னை மாநகராட்சியும், சிறு சிறு பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மக்களின் கடமையும் உள்ளது.
டெங்கு காய்ச்சல் ஆண்டு முழுக்க பரவினாலும் ஆகஸ்ட் - அக்டோபரில் அதிகரித்து, செப்டம்பர் - அக்டோபரில் உச்சம் தொடுவது வழக்கம். எனவே, டெங்கு காய்ச்சல் சூடுபிடிக்கும் மாதங்கள் வரவிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Although there hasn't been much talk about dengue fever recently, it is spreading silently in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.