முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவல் நிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு.

Updated On : 17 ஜூன், 2025 at 1:39 PM
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி - FB
பகிர்:

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில், திருமணம் செய்துகொண்ட இளைஞரின் சகோதரரான 15 வயது சிறுவனை பெண் வீட்டார் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நேற்றைய வழக்கின் விசாரணையில் ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதுடன் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த கடத்தல் வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆள் கடத்தல், மிரட்டல், அத்துமீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் இன்று காலை ஆஜராகியுள்ளார். அவரிடம் டிஎஸ்பி தமிழரசி விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்எல்ஏ ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க நேற்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. மேலும் அவர் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.