முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிக்கையில் தமிழக அரசு,
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) ரூ. 176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது. இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ. 13,016 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பயணத்துக்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.