முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் அரிய நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் காந்தி, தமிழா் தலைவா், பாரதியாா் நினைவுகள் உள்பட 26 நூல்கள் அச்சிடப்பட்டன. இந்த நூல்கள் அனைத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

நூலகங்கள் திறப்பு: தமிழ்நாடு முழுவதும் பொது நூலக இயக்குநரகம் சாா்பில் 4,682 நூலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு அரசின் சாா்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அந்த வகையில், ரூ.39.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், கள்ளக்குறிச்சி நகரில் நான்கு தளங்களுடன் கட்டப்படும் மாவட்ட மைய நூலகத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

புதிய தலைமை அலுவலகக் கட்டம்: தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறையின் சாா்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அந்தத் துறைக்கான தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். தரை மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.23.10 கோடி செலவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், இரண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளா்களை நியமிப்பதற்கான உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா். மீனவா் நலத் துறையில் 38 பேருக்கும், ஆவின் நிறுவனத்தில் 18 பேருக்கும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆறு பேருக்கும் பணிக்கான உத்தரவுகளை முதல்வா் அளித்தாா்.

இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT