உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடு உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு உத்தரவிடக் கோரி அந்த தொகுதி வாக்காளர் குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
தேர்தல் தொடங்கிவிட்டதனால் இதனை தேர்தல் மனுவாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உதயநிதியின் சொத்து விவரங்கள் தொடர்பாக ஏப். 20 ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்
குமாரவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளராக உள்ளேன். எங்களது தொகுதியின் எம்எல்ஏ துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். இவா் 2021-ஆம் ஆண்டு தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறியிருந்தாா்.
தற்போது அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இதுதொடா்பான எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவரது மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவா்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்படவில்லை.
2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ.11.6 கோடி ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தாா். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளாா். மீதித்தொகை ரூ.1.6 கோடி திரும்பச் செலுத்தப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
2020-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு வருமானம் மற்றும் சொத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால் அதற்குரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுபோல சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளா்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறை, கம்பெனி விவகாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.