பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!
ரூ.8,000 கூப்பன் - மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...
ரூ.8,000 கூப்பன் விவகாரத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, இந்தக் கூப்பன் மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா? அல்லது இரிடியமா? என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வியெழுப்பி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணிடம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் ரூ. 8,000 கூப்பன் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால், மனமுடைந்த அவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
Advertisement
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திமுகவின் ரூ. 8,000 கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் ரூ. 8,000 கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் ரூ. 8,000 கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத ரூ. 8,000 கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார் விஜய்.