திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லவுள்ளதைப் பற்றி...
திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து விசில் சின்னத்தில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை ஒருவருக்கு ஆதரவளித்தது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஒரு சில நிறுவன கருத்துக் கணிப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறியிருக்கிறது.
Advertisement
இதற்கிடையில், ஆச்சரியமளிக்கும் வகையில் இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா ஆகிய நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளில் 98 முதல் 120 இடங்களில் வெற்றிபெற்று விஜய்யின் தவெக முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்றும், எம்ஜிஆர் போன்று விஜய்க்கும் பிளாக்பஸ்டர் அறிமுகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தன.
வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் (ஏப். 28) காலை திருச்செந்தூர் சென்ற விஜய், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலில் விஜய் தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவுக்கு விஜய் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைமறுநாள் (மே 2) வேளாங்கண்ணி செல்லும் விஜய், அதைத் தொடர்ந்து நாகூர் தர்காவுக்கும் செல்லவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.