முகப்பு
தமிழ்நாடு

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

Updated On : 16 ஏப்ரல் 2026, 5:59 am IST
இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் (கோப்புப்படம்).
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச்.ஓ.பி.எஃப்.) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவை திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு எழுதிய நான்கு பக்க கடிதம், அவரது சார்பில் தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

Advertisement

Advertisement

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின் கீழ், தேர்தல்களைச் செவ்வனே நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும். தேர்தலின்போது நடுநிலைமையைக் காக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும், தான் விரும்பும் உயதிகாரியை மாநில காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, அந்த உயதிகாரியை "பொறுப்பு டிஜிபி'-ஆக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் நியமிக்க இயலும்.

மேற்கு வங்கம் போன்ற பிற தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அண்மையில் டிஜிபி மாற்றப்பட்டபோது, அங்கு "பொறுப்பு டிஜிபி' என்றே உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய நியமனங்கள் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முழு நேர மற்றும் காவல் படைத்தலைவராக சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழகத்தை மட்டும் பாகுபாட்டோடு நடத்துவது வெளிப்படையாகியிருக்கிறது.

மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் நியமனத்தின்போது "பிரகாஷ் சிங் வழக்கில்' உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய நியமன நடவடிக்கையை தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. முழு நேர டிஜிபியை நியமிப்பதற்கான வழக்கமான நடைமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சிக்கு வரும் அரசால் மீண்டும் தொடங்கப்படும்.

எனவே, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளை மீறியதாகக் கருதப்படும் சூழலையும், இதன்காரணமாக எழக்கூடிய சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும் வகையில், சந்தீப் ராய் ரத்தோரை முழு நேர டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவராக நியமிக்க ஏப்ரல் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.