தமிழகத்தின் புதிய டிஜிபி ஆகிறாா் மகேஷ் குமாா் அகா்வால்
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து...
தமிழ்நாட்டின் புதிய தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக(டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக, மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழகத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும் இடையே மாதக்கணக்கில் இணக்கமற்ற நிலை நீடித்து வந்தது. இதன் காரணமாக, திமுக ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மூத்த அதிகாரிகளில் இளையவரான வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபி-யாக முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தேர்தல் ஆணைய அனுமதியுடன் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் காலத்தில் டிஜிபி தேர்வுக்கான கூட்டத் தேதி வந்ததால், தோ்தலுக்குப் பிறகு அக்கூட்டத்தை யுபிஎஸ்சி தள்ளிவைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி- டிஜிபி நியமனத்துக்கான உயர்நிலை தேர்வுக் குழுக் கூட்டத்தில் யுபிஎஸ்சி மற்றும் மத்திய உள்துறை உயரதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பதவி மூப்பு அடிப்படையில் ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று உயரதிகாரிகளின் பெயர்களுக்குத் தேர்வாணையம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், சட்டம் பயின்று, 1994 ஆம் ஆண்டு தனது 22 வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் தமிழக கேடர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர்.
தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு, இன்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு மற்றும் சேலம் ரயிலில் நடந்த ரூ. 5.78 கோடி கொள்ளை வழக்கு போன்றவற்றை மிகச் சிறப்பாக விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
2020-ம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றினார். தமிழ்நாடு காவல் துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.-யாக இருந்த இவர், தற்போது எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Mahesh Kumar Aggarwal has been appointed as the new Director General of Police (DGP) of Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.