பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சு
தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேச்சு...
தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக வருவேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 16) கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் முழு தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டு 10 முக்கிய அம்சங்களை வாசித்தார்.
Advertisement
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்பின்னர் தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் பற்றி பேசுகையில்,
"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளும் நம் தொகுதிகள்தான். அனைத்து தொகுதிகளுக்கும் எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஆனால், என்னுடைய தொகுதிக்கு நான்தான் பிரதிநிதி. தமிழ்நாட்டில் நாம் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். அந்தவகையில் தமிழ்நாட்டுக்கு நான் என்னவாக இருந்தாலும் என்னுடைய தொகுதிக்கு நான் எம்எல்ஏதானே.
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் எனக்கு எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். அதனால் என்னுடைய தொகுதிகளுக்கு நான் மாதம் ஒருமுறை கண்டிப்பாக வருவேன். அத்துடன் நீங்களும் என்னைச் சந்திக்கலாம். மிகவும் கடினம் என்று நினைத்துவிடாதீர்கள். ஈஸியாக என்னைச் சந்திக்கலாம். உங்களுடைய தேவைகளை நான் கேட்காமலே செய்துகொடுப்பேன்" என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கும் நிலையில் பெண்கள், தாய்மார்கள் தங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தைக் கோலமாக போடுங்கள், அது நீங்கள் இந்த விஜய்க்கு தரும் ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார்.