கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து....
வார இறுதி நாள்கள் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏப். 17, ஏப். 18 மற்றும் ஏப். 19 ஆம் தேதிகளில் வார விடுமுறை நாள்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப். 17 (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், ஏப். 18 (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப். 17 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் ஏப். 18 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து ஏப். 17 மற்றும் ஏப். 18 ஆகிய நாள்களில் 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.