பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவெடுத்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவெடுத்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.
Advertisement
மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.
எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.
குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.
இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.
நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை.
இது நீதியல்ல;
இது உண்மையான நோக்கமல்ல;
இது வெறும் காட்சிப்பிழை!
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.