புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!
சென்னை ஒன் செயலியின் மூலம் இதுவரை 1 கோடி பயணச்சீட்டுகள் பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன் செயலியின் மூலம் இதுவரை 1 கோடி பயணச்சீட்டுகள் பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விடியோ வெளியிட்டு எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் மூலம் தினமும் 40 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்கின்றனா்.
இதில், சுமாா் 70,000-க்கும் அதிகமானோா் விருப்பம்போல பயணம் செய்யும் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான மாதாந்திரப் பயணச்சீட்டு அட்டைகள் மூலம் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனா்.
Advertisement
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து மற்றும் எண்மப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகா் ரயில்களில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலியில் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான சில்வா் மற்றும் கோல்ட் ஆகிய மாதந்திர பயண அட்டைகளை இணைதளம் மூலமாகவே பெறும் வசதியும் நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை ஒன் செயலியை சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.