திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
திமுக தலைமையிலான கூட்டணி உடையும் நிலையிலிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
திமுக தலைமையிலான கூட்டணி உடையும் நிலையிலிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது, "தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் - 2,080; படுகொலைகள் - 8,008; போக்ஸோ வழக்குகள் - 39,900. தமிழகத்தின் சரித்திரத்தில் இதுபோல ஒரு மோசமான ஆட்சியின் சட்டம் - ஒழுங்கைப் பார்த்ததில்லை.
இதைத்தான், சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த்தும் பேசினார். எங்கள் அண்ணன் ரொம்ப நல்லவர்; ஆனால், சட்டம் - ஒழுங்கு சரியில்லை. எங்கள் அண்ணன் ரொம்ப நல்லவர்; ஆனால், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் புழக்கம் அதிகமாகி விட்டது என்றெல்லாம் பிரேமலதா கூறினார்.
Advertisement
இன்று பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஆனால், அங்கு ராகுலின் பிரசாரம் தனி, ஸ்டாலினின் பிரசாரம் தனி.
அதனால்தான், அந்தக் கூட்டணி இன்றைக்கோ நாளைக்கோ உடையக்கூடிய கூட்டணி. காங்கிரஸ் - திமுக கூட்டணியைப் பொருத்தவரையில், ஒரு பொருந்தாக் கூட்டணி.
அந்தக் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர், திமுகவுடன் கூட்டணியில் மட்டுமே இருப்பதாகவும், லஞ்சத்துக்கு அவர்கள் பொறுப்பில்லை என்றும் சொல்கிறார். கூட்டணிக் கட்சிகளில் இருக்கும் நீங்களே விமர்சித்துக் கொள்கிறீர்கள்" என்று தெரிவித்தார்.