பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!
விபத்துக்குள்ளான கட்டனார்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணைக்குப் பிறகு முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இன்று (ஏப். 19) வெடித்து விபத்துக்குள்ளானது. விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறுகிய இடத்தில் பணிபுரிந்து வந்தபோது வெடி விபத்து நேரிட்டதால், பலர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
இரவு 7 மணி நிலவரப்படி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து நேரிட்ட ஆலையின் கட்டட இடிபாடுகளில் தேடுதல் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வெடி விபத்து தொடர்பாக செய்தியாளர்களுடன் ஆட்சியர் சுகபுத்ரா பேசியதாவது:
வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்துள்ளன. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பேசியதாவது:
பட்டாசு ஆலை விபத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலை உரிமையாளரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.