முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

பட்டாசு ஆலையில் விடுமுறை நாளில் விதிகளை மீறி குறுகிய இடத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்ததே விபத்திற்கு காரணமா? என்பது குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 8:48 pm IST
பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் - எக்ஸ்
பகிர்:

விருதுநகரில் நேர்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இன்று (ஏப். 19) வெடித்து விபத்துக்குள்ளானது.

விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறுகிய இடத்தில் பணிபுரிந்து வந்தபோது வெடி விபத்து நேரிட்டதால், பலர் படுகாயம் அடைந்தனர். வெடிபொருள்கள் உரசியபோது விபத்து நேர்ந்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

வெடி விபத்தில் குழந்தை உள்பட 14 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்தின்போது 10 கி. மீ. தூரத்துக்கு சப்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தகவல் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

4 தனிப்படைகள் அமைப்பு

பட்டாசு ஆலையின் கட்டட இடிபாடுகளில் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீயணைப்புத் துறையினருடன், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நேர்ந்த ஆலையின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறுகியதாக இருந்த 4 அறைகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் அருகருகே அமர்ந்து பணிபுரிந்து வந்ததால், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆய்வு செய்த பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பேசியதாவது:

''பட்டாசு ஆலை விபத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலை உரிமையாளரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

ஆட்சியர் சுகபுத்ரா பேசியதாவது:

''வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்துள்ளன. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Virdhunagar kattanarpatti Firecracker Factory Tragedy: Death Toll Rises to 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.