திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்
திருச்சூர் பூரம் விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து நேர்ந்துள்ளது குறித்து...
கேரள மாநிலம் திருச்சூர் பூரம் விழாவில் இன்று (ஏப். 21) பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முண்டத்திகோடு பகுதியில் உள்ள திருவம்பாடி கோயிலுக்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
Advertisement
ஓலை கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பட்டாசு தயாரிக்கும் பணியில், 70 தொழிலாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பட்டாசு தயாரிக்கும் இடத்தில் 2000 கிலோ எடையுடைய பட்டாசு மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மேலும் வெடிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 40 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.