விருதுநகர் பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முதல்வர் இரங்கல்
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெடி விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தேவைப்படும் உதவிகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 21 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் 4 அறைகளும் சேதமடைந்தன. பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனுமதியுடன் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகத் தெரிகிறது.