கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்
கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? என்று நெரிசல் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
நந்தனம்: கரூர் அடிமையை தொகுதி மாற்றி போட்டியிட வைத்தது ஏன் என்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறவிருக்கும் நிலையில், சென்னை நந்தனத்தில் இன்று தவெக பிரசாரக் கூட்டத்தில் தலைவர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், அரசியலுக்கு வந்தது தவறா? தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிய வேண்டும், போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்க நினைத்தது தப்பா, மீனவர்கள், விவசாயிகள், உழைப்பவர்கள் நல்லா இருக்கணும்னு நினைத்தது தவறா, ஆனால் மக்களே நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லோரும் நல்லாருப்போம் என்று கூறினார்.
Advertisement
கரூர் விஷயத்துக்கு வருகிறேன். கரூரில் என்ன நடந்தது என்று கரூர் மக்களைக் கேட்டாலே புட்டு புட்டு வைப்பார்கள். ஆனால் என் மீது பழியைத் தூக்கிப் போடுகிறீர்கள்? என்னவோ நான் அரசியலே செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு, பேரவையில் என் மீது பழிபோடுகிறீர்கள். தாமதமாக வந்தேன் என்று.
காவல்துறை எனக்கு அனுமதி கொடுத்த நேரத்தில் நான் அங்கே இருந்தேன். நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் இருந்த மக்களை எல்லாம் அம்போவென்று விட்டுவிட்டு வர முடியுமா?
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு நான் எப்படி வந்தேன் என்பதை உலகமே நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் என் மீது பழிபோடுகிறீர்கள்.
ஒரு மனசாட்சி என்பது வேண்டாமா? சரி நீங்கள்தான் எதுவுமே செய்யவில்லையே, பிறகு ஏன் 20 வருடங்களாக கரூரில் மட்டுமே போட்டியிட்டு வந்த உங்கள் அடிமையை ஏன் கோயம்பத்தூர் வரை ஓட வைத்தீர்கள்?
உங்களுக்கு நீதி கேட்க வந்த விஜய், இன்று உங்களிடம் நீதி கேட்கிறேன். விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
புதுச்சேரியில் பதிவானது போல 90 சதவீதத்துக்கும் மேல் தமிழ்நாட்டிலும் வாக்குப்பதிவு நடக்க வேண்டும். எனவே, மக்கள் அனைவரும் ஏப். 23 அன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். தயவு செய்து உங்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினார்.