எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன்
எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்: எதிர்கட்சிகள் முழக்கமான தமிழகத்தில் மாற்றம் வருமா, இல்லையா என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் தெரியவரும் என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் 11-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன், வியாழக்கிழமை காட்பாடி காந்தி நகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 175-வது வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து அவரது மகனும், வேலூர் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிர் ஆனந்த் தனது வாக்கைச் செலுத்தினார்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
காட்பாடி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தத் தேர்தல் தமிழகத்தில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தரும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் காட்பாடி தொகுதிக்கான என்னுடைய கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.
தொடர்ந்து, இந்தத் தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் அது தெரியவரும் என்றார்.
திமுகவின் திட்டங்கள் மக்களிடத்தில் முழுமையாகச் சேரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே? என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்வார்கள். அப்படி அவர்கள் எதிர்த்துச் சொல்லவில்லை என்றால், அவர்கள் எதிர்க்கட்சிகளே இல்லை என்றார்.
காட்பாடி அருகே பொன்னை, பாலேகுப்பம் பகுதியில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வாக்கு அளிக்காமல் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, எனக்கு அந்தத் தகவல் இதுவரை வரவில்லை. இருப்பினும், அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட உள்ளேன் என்றார்.