இரட்டை இலக்க வளர்ச்சி! சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி நிச்சயம்: அமைச்சர் டிஆர்பி ராஜா
சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தொடர்ந்து 15–20 ஆண்டுகள் தொடர்ந்து வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம்தான் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அரவணைப்பில் வளரும் நம் தமிழ்நாடு!
இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது!
இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி.
திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான்!
2030-க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் முதல்வரின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.