துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம்.
மேலும் இந்தப் படத்தில் பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Advertisement
இப்படத்தின் டீசர், டிரைலர் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் வெளியீடு சிக்கல்களைச் சந்தித்தது.
ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு தொடர்பாக தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஏப். 30) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ’துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் திரைப்படம் தொடர்பான நிதி விவகாரங்களை மேற்கொள்ள, தனி வங்கிக் கணக்கு தொடங்க படத் தயாரிப்பு நிறுவனமான கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய வங்கிக் கணக்கின் வரவு செலவுகளை கண்காணிக்க வழக்குரைஞர் ஒருவரை கண்காணிப்பாளராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு தொடங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், படத்தை வெளியிடுவதற்கு தடையை ஏற்படுத்தக் கூடாது எனவும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23 ஆம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.