4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது பற்றி...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ள 4 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோா் வெற்றி பெற்றனா். பின்னா், இவா்கள் நால்வரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.
இதற்கு முன்னதாகவே, அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததாக இவர்கள் நால்வர் மீதும் அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், இவர்களின் ராஜிநாமாவை ஏற்பதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாா் நிலுவையில் இருக்கும் நிலையில், அதை தவிா்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்ய முடியுமா, அந்த ராஜிநாமாவை ஏற்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடைத்தேர்தல் அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழ்நாடு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.