திமுக மகளிரணி மாநாட்டுக்கு தயாராகும் விருந்து!
தஞ்சாவூர் திமுக மகளிரணி மாநாட்டுக்கு தயாராகும் விருந்து தொடர்பாக...
திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் பங்கேற்கவுள்ள தொண்டர்களுக்கு வழங்குவதற்காக விருந்து தயாராகி வருகிறது.
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு பூத்துக்கு 10 போ் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளிலிருந்து மொத்தம் 1.25 லட்சம் பேர் சீருடையில் கலந்து கொள்ளவுள்ளனர். மொத்தத்தில் ஏறத்தாழ 1.50 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டுக்காக செங்கிப்பட்டி பகுதியில் ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதற்காக இரண்டு இடங்களில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது.