ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - அர்லேகருக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!
தமிழக ஆளுநர் ஆர்லேகரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்...
வைகை ஆற்றை சுத்தம் செய்யவில்லை என்றால் ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகை ஆற்றைக் கடக்கும்போது அதில் தண்ணீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்றதாகவும்; ஆற்றை சுத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை நேரடியாகக் களமிறங்கும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கூறியுள்ளார்.
ஆளுநரின் பேச்சுக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வைகையைப் போல் கூவம் ஆற்றைக் கடக்கும்போது தோன்றவில்லையா? என ஆளுநர் அர்லேகருக்கு மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, இன்று (ஜூலை 2) அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, "உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்” என்று கூறியுள்ளார்.
ஆளுநர் அவர்களே,
கடந்த வாரம் தமிழகச் சட்டப்பேரவையில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?
ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர் என் இரவியிடம் (முன்னாள் ஆளுநர்) கேட்டுப்பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
CPI(M) MP Su. Venkatesan has condemned TN Governor R.V. Arlekar's statement that the Raj Bhavan would directly intervene if the Vaigai River is not cleaned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.