அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஆளுநர் மறுப்பா?
மத்திய அரசின் பிரதிநிதி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மறுப்பு: மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி
மத்திய அரசின் பிரதிநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மறுக்கப்படுவதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது, "தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் முதலில் வந்தே மாதரம், அதன் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து முதல்வரிடம் கேள்வியெழுப்பினோம்.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் இத்தகைய நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் பேசினர். ஆனால், அதனை ஏற்க ஆளுநர் மறுத்து விட்டார்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் பிரதிநிதி என்ற முறையில், மத்திய அரசின் உத்தரவைத்தான் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்த நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதனைத் தவிர்க்க முடியாது என முதல்வர் கூறினார். பிப்ரவரி மாதத்துக்கு பிறகுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால், மே 10-ல் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.