தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் நிவர்த்தி: செங்கோட்டையன்
தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் நிவர்த்தி செய்யப்பட்டது குறித்து....
இணையவழி உட்பிரிவல்லாத தானியங்கி பட்டா மாறுதல் சேவை எளிமைப்படுத்தப்படுதல் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வருவாய்த் துறையைப் பொறுத்தவரையில், நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர், புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.
Advertisement
Advertisement
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், இது குறித்து 12.06.2026 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில், அரசாணை (நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (நி.அ-2) துறை, நாள் 04.02.2020 குறித்து விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, முந்தைய இணையவழி உட்பிரிவு அல்லாத தானியங்கி பட்டா மாறுதலில் உள்ள இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து திருத்திய அரசாணை (நிலை) எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 25.06.2026 இவ்வரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன:-
இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாள்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்.
இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.
Minister for Revenue and Disaster Management K.A. Sengottaiyan has issued a statement regarding the simplification of the online automated patta transfer service.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.