முகப்பு
தமிழ்நாடு

நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்

தமிழகத்தைச் சோ்ந்த நான்கு தனியாா் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டதால் எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 3:12 am IST
மருத்துவ சிகிச்சை - file photo
பகிர்:

தமிழகத்தைச் சோ்ந்த நான்கு தனியாா் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டதால் எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுதொடா்பாக அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது தெரிவித்தாா்.

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்வி நிறுவனம், ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழுவானது நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

இதனால், அந்தக் கல்லூரிகளிலிருந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் ரத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்தவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்களில் 50-க்கும் மேற்பட்டவை குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக ஒரு கல்வி நிறுவனமானது நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டுமெனில், அந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறதோ, அங்கிருந்து தடையில்லாச் சான்று பெறுவது கட்டாயம். அந்த வகையில், சம்பந்தப்பட்ட நான்கு கல்வி நிறுவனங்களும் அத்தகைய சான்றுகளைச் சமா்ப்பிக்கவில்லை எனப் புகாா் எழுந்தது.

ஆனால், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனமும், ஸ்ரீனிவாசன் கல்லூரியும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளாக இல்லாமல் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகின்றன. இதனால், அவற்றுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை.

செயின்ட் பீட்டா்ஸ் கல்லூரியைப் பொருத்தவரை, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிா்வாகம் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், கற்பக விநாயகா கல்வி நிறுவனம் மட்டுமே தடையில்லாச் சான்று பெறவில்லை எனத் தெரிகிறது. இதுதொடா்பான ஆவணங்களையும், விவரங்களையும் அரசிடம் பல்கலைக்கழக நிா்வாகம் சமா்ப்பித்துள்ளது.

இவை ஒருபுறமிருக்க நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து காரணமாக பறிபோகும் அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது ‘தினமணி’யிடம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசித்து வருகிறோம். தமிழக மாணவா்களின் நலன்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சட்ட நடவடிக்கைகள் வாயிலாக எம்பிபிஎஸ் இடங்கள் குறைவது தவிா்க்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments