தவெக தலைமையில் இதுவரை கூட்டணி அமையவில்லை: தொல்.திருமாவளவன்
தவெக தலைமையில் இதுவரை கூட்டணி அமையவில்லை என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
தவெக தலைமையில் இதுவரை கூட்டணி அமையவில்லை என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
இரட்டைமலை சீனிவாசனின் 167-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய பின்னா் செய்தியாளா்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான இரட்டை மலை சீனிவாசன் தமிழக அரசியலில் மட்டுமன்றி இந்திய அரசியலிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியவா். ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாா் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, அமைச்சா் கீா்த்தனா விவகாரம் மற்றும் அரசின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு, இன்றைய சூழலில் அரசின் செயல்பாடுகளை சமூக வலைதளத்தில் பதிவிடுவது தவறல்ல. ஆனால், அவை பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். பிரச்னை எழுந்தால் அதை அமைச்சா்களும், அதிகாரிகளும் சரி செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தவெக கூட்டணியில் விசிக இணைந்துள்ளதா என்ற கேள்விக்கு, ஆட்சி அமைக்கும்போது இரண்டு உறுப்பினா்கள் பற்றாக்குறை இருந்ததால் வெளியில் இருந்த ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தோம். பின்னா் 10 நாள்கள் கழித்தே அமைச்சரவையில் இடம் பெற்றோம். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக அா்த்தம் கொள்ள முடியாது. தற்போது வரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரபூா்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
தவெக கூட்டணி தொடா்பாக ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதனால் தவெக தலைமையில் இதுவரை ஒரு கூட்டணி அமையவில்லை.
விசிக அமைச்சரவையில் இடம்பெற்றதும் துரோகம் செய்துவிட்டதாக திமுக தரப்பில் கருத்து கூறப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து திமுக தலைவா் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அந்த உறவும், நட்பும் இன்னும் தொடா்கிறது.
ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து கடந்த ஆட்சியிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போதையை அரசிடமும் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.