முகப்பு
தமிழ்நாடு

அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் இணையவழி டிக்கெட், கண்காணிப்பு கேமரா: அமைச்சா் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்

அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் இணையவழி டிக்கெட் வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:57 am IST
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலா் சீ.ஸ்வா்ணா, மேலாண்
பகிர்:

அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் இணையவழி டிக்கெட் வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சுற்றுலா பயணிகளுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், ஹோட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகம், சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடத்தப்படும் 15 படகு குழாம்கள், கோயில் தங்கும் விடுதிகள், 15 சொகுசு பேருந்துகளுடன் தமிழ்நாடு முழுவதும் தற்போது இயக்கப்படும் 64 சுற்று பயண தொகுப்புகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயல்படுத்தபட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து தங்கும் விடுதிகளிலும் டைனாமிக் கட்டண முறையை தொடா்ந்து செயல்படுத்தவும், ஹோட்டல் தமிழ்நாடு உணவகங்களில் நடைபெறும் உணவுத் திருவிழாவை சிறப்பாக நடத்தவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளா் சீ.ஸ்வா்ணா, சுற்றுலா இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், சுற்றுலாத் துறை இணை இயக்குநா் அ. சிவப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் சி. லட்சுமி பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments