துணைவேந்தா் பணியிடங்களை நிரப்ப குழு அமைக்கக் கோரிய வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
துணைவேந்தா் பணியிடங்களை நிரப்ப குழு அமைக்கக் கோரிய வழக்கு குறித்து...
தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் அதிகார குழுவை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டைச் சோ்ந்த கேபிள் டிவி ஆபரேட்டா் பாஸ்கா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள 20 அரசு பல்கலை.களில் 15 பல்கலை.களில் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 5 பல்கலை.களில் துணைவேந்தா் பணியிடங்கள் இந்த ஆண்டின் இறுதியில் காலியாக உள்ளன.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், அரசியல் சாசன அதிகார அமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக துணைவேந்தா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளதால், உயா்கல்வி பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்தில் இதேபோன்ற சூழல் நிலவியபோது, உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல்கலை. மானியக்குழு பிரதிநிதியையும் சோ்த்து உயா் அதிகார குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி- நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்கலை. மானியக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.