முகப்பு
தமிழ்நாடு

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசுக்கு மண்டியிட நினைக்கிறதா தவெக அரசு? திமுக

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினர்களையும் இணைப்பதற்கு எதிர்ப்பு...

Updated On : 8 ஜூலை 2026, 4:05 pm IST
முதல்வர் விஜய் - IANS
பகிர்:

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினர்களையும் இணைத்தால் மாநில அரசின் உரிமை பறிபோகும் என்று திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.

இதுபற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

" உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை 3 லிருந்து 5 ஆக உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தார். இது முற்றிலும் மாநில உரிமைக்கு எதிரானது.

Advertisement

Advertisement

பல்கலைக் கழகங்களை செங்கல் , சிமெண்ட் வைத்து கட்டுவதோடு ஒரு மாநில அரசினுடைய அதிகாரம் முடிவடையாது. அந்த பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

1949 ல் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் போது மத்திய அரசிற்கு டிட்டர்மினேஷன் ஆஃப் எஜுகேஷன், ஸ்டாண்டர்ட் ஆஃப் எஜுகேஷன் சம்பந்தமாக மட்டும்தான் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறி இருப்பார். அதை மீறி 2018 இல் கொண்டுவரப்பட்ட யுஜிசி ரெகுலேஷன் 7.3 ன் மூலம் துணை வேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என கூறப்பட்டது. அதை அப்போதைய அரசு ஏற்க மறுத்து அதற்கு எதிராக ஒரு அரசாணை வெளியிட்டது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் 3 பேர் அடங்கிய குழுவில் ஒருவரை ஆளுநர் நியமிப்பார், ஒருவரை அரசு நியமிக்கும், ஒருவரை பல்கலைக் கழக சிண்டிகேட் நியமிக்கும் ஆனால் இந்த முறையை கடந்த ஆட்சியின் போது ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுத்த மறுத்து துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருந்தார். ஆளுநருக்கு எதிராகவும், யுஜிசி விதி 7.3 க்கு எதிராகவும் திமுக அரசு சார்பில் வழக்கு போடப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அதேபோல துணை வேந்தர் நியமனத்தை முதலமைச்சரே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தோம். அந்த சட்ட திருத்தத்தோடு 10 மசோதாக்களை ஏற்காமல் ஆளுநர் ஆர். என். ரவி காலந்தாழ்த்தி கொண்டு இருந்ததால் உச்சநீதிமன்றம் மூலம் அந்த 10 பில்களை சட்டமாக்கினோம். அது இந்தியாவே திரும்பி பார்க்கிற அளவிற்கு கவர்னரின் அதிகாரத்தை வரைமுறைபடுத்தி உச்சநீதிமன்றம் ஒரு சட்டமாக வெளியிட்டது.

ஆனால் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர், 5 நாமினியில் கவர்னர் பரிந்துரைக்கும் இரண்டு நாமினின்னு சொல்கிறார். இன்னொரு நாமினி யார் என்று அவர் மறைமுகமாக யுஜிசி நாமினியை கூறுகிறார். இந்த அரசு மத்திய அரசுக்கு மண்டியிட பார்க்கிறார்களா.? இல்லை கவர்னர் உடைய அதிகாரம் பறிக்கப்பட கூடாது என நினைக்கிறார்களா.? எதற்காக முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய அதிகாரத்தை எடுத்து கவர்னருக்கு கொடுக்க வேண்டும். அதேபோல ஒன்றிய அரசு சொல்லும்படி யூஜிசியின் நாமினியை இதில் சேர்ப்பது மூலம் மத்திய பாஜக அரசிடம் மண்டியிட்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது இந்த அரசு. மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுக்க சொல்லி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி வலியுறுத்தினாரா?

இது நம்முடைய மாநில உரிமை. இதை விட்டு விடக்கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில உரிமைக்காக உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாங்கள் வென்று வந்திருக்கிறோம். அதற்கு மாறாக யுஜிசி உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது மூலம் நமது பல்கலைக் கழகங்களின் அதிகாரம் மத்திய அரசு வசம் போய்விடும்.

கடந்த எங்களது ஆட்சியில் கூட இவர்கள் சொல்வதை போல 5 நபர்களை குழுவில் வைத்துக் கொண்டு துணை வேந்தர்களை நியமித்து இருக்கலாம். ஆனால் மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது என்பது நம் மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது போல. எனவே எக்காலத்திலும் இந்த யுஜிசியின் நாமினியை செலக்ஷன் பேனலில் சேர்க்கவே கூடாது. சேர்த்தால் அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மாநில உரிமை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மாநில மக்களுக்கு கொடுத்த உரிமை, நாம் இதுவரை போராடி காப்பாற்றி வந்துள்ள உரிமையை நாமே விட்டு கொடுப்பது போல ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.

summary

DMK opposed to expand university Vice-Chancellor search committee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments