செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை!
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை பற்றி...
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த கும்பலை இயக்கியது திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி, அவரின் சகோதரா் அசோக்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடா்பும் இல்லை. இதுதொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்கூட என்னுடைய பெயா் இடம்பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீஸாா் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, இதே வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் முன்ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் முன்ஜாமீன் மனுக்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Senthil Balaji's anticipatory bail plea - Hearing in the afternoon!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.