சென்னையில் வெய்யில் குறையும்! மழைக்கு வாய்ப்பா?
வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்...
கடுமையான வெய்யிலுக்குப் பிறகு தற்போது புதிய மேகம் உருவாகியுள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கடும் வெய்யிலுக்குப் பிறகு கடல் காற்று நுழைவதன் மூலமாக மேகம் உருவாகிறது. இந்த மேகம் மேலும் வளர்ந்து, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மழையைக் கொடுக்குமா? என்றால் காற்று இன்னும் சாதகமாக இல்லை என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த மேகம் உருவாவது குறுகிய கால மழைப்பொழிவைப் பெறுவதற்கான ஒரு வழி" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது முந்தைய பதிவில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டுமே வெய்யில் அதிகமாக இருக்கும். பின்னர் 40 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை குறையும். படிப்படியாக வெப்பநிலை குறையும். ஜூன் மாதத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். வழக்கத்தைவிட சென்னையில் தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும்.
நெல்லை முதல் விருதுநகர் வரை தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.