மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நிர்மல் குமார்
மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்து அமைச்சரின் அறிவிப்பு.
மின்சார வாரியத்தில் இந்த ஆண்டுக்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல்கட்டமாக இந்த ஆண்டிற்குள் மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியாளர்கள் அரசுப் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ”மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாக செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஊழியர்களின் நீண்டகாலப் கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்றார்.
”மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக 15,000 பணியாளர்களைப் புதியதாக வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை (Proposal) தயாராகி வருகிறது.
முதல்வரின் ஒப்புதலுக்குப் பின், இந்த ஆண்டிலேயே இந்தப் பணியிடங்கள் அனைத்தும், தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், முழுமையான அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும். மேலும், கேங்மேன் (Gangman) பணியிடங்கள் தொடர்பான நிலுவை விவகாரங்களில் இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறினார்.