ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது...
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதல்வர் இதனை தினந்தோறும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசினர் விருந்தினர் மாளிகையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிகத் திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து முழுமையான மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் உரிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டு, அதற்கேற்ப வழக்குகள் பதிவு செய்யப்படும். எங்கு ஊழல் அல்லது முறைகேடு நடைபெற்றிருந்தாலும் அவை விரைவாக அடையாளம் காணப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது. காணாமல் போன தரவுகள் என்னென்ன, அவற்றின் தன்மை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முதல்வர் தினந்தோறும் கண்காணித்து வருகிறார். திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க் மீட்கப்பட்டால், அதிலுள்ள தகவல்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எந்தெந்த தரவுகள் காணாமல் போயுள்ளன என்பது குறித்து விசாரணை நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாத வகையில் சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Minister Nirmal Kumar said regarding the hard disk theft incident
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.