உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் சோதனை முயற்சியில் உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள் அமைக்கப்படும் என்றும், அனைத்து உணவக ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் சோதனை முயற்சியில் உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள் அமைக்கப்படும் என்றும், அனைத்து உணவக ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் அவரது தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:
அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதி செய்ய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் சோதனை முறையில் சாலையோரங்களில் சுகாதாரமிக்க உணவகங்களை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு உணவகங்கள் ஒரே மாதிரியான தரநிலையுடன் அமைக்கப்படும். கடைகள் அமைப்பதற்கான முதலீடு மற்றும் தேவையான உதவிகளை அரசு வழங்கும். மேலும், சுகாதாரமான உணவு வழங்குவது குறித்து உணவு கையாளுபவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
அதேபோன்று தமிழகம் முழுவதும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியா்கள், உணவு தயாரிப்பாளா்களுக்கு டைபாய்டு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
யூடியூபா்கள் உணவு விமா்சனங்கள் (ஃபுட் ரிவ்யூ) மேற்கொள்வதை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கான தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிக்கும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால் இறந்தவா்களின் உடல்கள் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளா்கள் லஞ்சம் பெற்றால் 104 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.