காலை உணவு சாப்பிட்டும் சோர்வாக இருக்கிறீர்களா? என்ன காரணம் தெரியுமா?
காலை உணவு எப்போது சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி...
காலை உணவைத் தவிர்ப்பது எவ்வளவு மோசமானதோ, சரியான காலை உணவை எடுத்துக்காததும் மோசமானதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு சோர்வு, மயக்கம், அல்சர் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அதேபோல சிலர் காலை உணவு சாப்பிட்டாலும் சோர்வாகக் காணப்படுவார்கள். அதற்கு காரணம் எடுத்துக்கொள்ளும் உணவும் அதனைச் சாப்பிடும் விதமும்தான்.
காலை உணவுகள் பொதுவாக அவசர அவசரமாக, ஒரே மாதிரியாகவே இருப்பதால் அவை ஆரோக்கியமற்றவையாக இருக்கின்றன.
Advertisement
Advertisement
அதனால் காலை உணவைச் சாப்பிடுவது முக்கியமல்ல, சத்தான உணவைச் சாப்பிடும்போதுதான் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர். உணவில் கலோரியை மட்டும் பார்க்காமல் அதில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, அந்த உணவு உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் அளிக்குமா? என்பதையெல்லாம் கவனத்தில்கொண்டு உணவைத் தேர்வு செய்ய வேண்டும்.
உடல் இயக்கத்திற்காக காலையில் ஏதேனும் ஒரு உணவை உண்டால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், காலையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் உங்களது அடுத்த சில மணி நேர இயக்கத்திற்கும் வேலைக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெள்ளை ரொட்டி டோஸ்ட், சர்க்கரை கலந்த உணவுகள், டீ - பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறு, மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இவை உடலில் ஆற்றலுக்குப் பதிலாக சோர்வைத்தான் ஏற்படுத்தும்.
கார்போஹைட்ரேட், சர்க்கரை போன்றவை வேகமாகச் செரிமானம் ஆவதால் ரத்தச் சர்க்கரை அளவு விரைவாக உயர்ந்து உடனடி ஆற்றலை அளிக்கிறது. பின்னர் அதே வேகத்தில் குறையும்போதுதான் சோர்வு, குழப்பமான மனநிலை, எரிச்சல் ஏற்படக் காரணமாகிறது.
என்ன சாப்பிட வேண்டும்?
காலையில் எழுந்தவுடன் டீ, காபிக்கு பதிலாக பிளாக் டீ / காபி, எலுமிச்சை தேநீர் என சாப்பிடலாம்.
அதேபோல காலை உணவாக
காய்கறிகள் நிறைந்த கிச்சடி,
இட்லி (3 முதல் 4), காய்கறிகள் மற்றும் பருப்பு நிறைந்த சாம்பார், வேர்க்கடலை,
சப்பாத்தி (2) குருமா, நட்ஸ் அல்லது பயறு வகைகள்
வெஜிடபிள் சாலட், முட்டை
முட்டை, பன்னீர், முளைகட்டிய தானியங்கள் என சாப்பிடலாம்.
அதேபோல ஏதேனும் ஒரு பழத்தையும் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவில் அனைத்துவிதமான சத்துகளும் நிரம்பியிருக்க வேண்டும் என்றும் குறிப்பாக புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியமாகவும் அன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
காலை உணவாக டீ , காபி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காலை எழுந்து 2 மணி நேரத்திற்குள் காலை உணவைச் சாப்பிடுவது நலம் என்றும் முட்டை, பயறு வகைகள், நட்ஸ், பழங்கள் ஆகியவை காலை உணவில் இடம்பெற வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.