அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மன்னிப்புகோர வேண்டும்: சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு எதிராக சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறித்து...
தன்னைப் பற்றி அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் அவதூறு பரப்பியதாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் பேசிவருவதாகவும், அவர்கள் இருவரும் மன்னிப்புகோர வேண்டும் எனவும் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வக்கீல் நோட்டீஸில் கூறியிருப்பதாவது, "சபரீசன் குறித்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். தன்னைக் குறித்து ஊடகங்களில் தெரிவித்த அவதூறு கருத்துகளை திரும்பப் பெறுவதுடன், அதே ஊடகங்கள் முன்பாக இருவரும் மன்னிப்புகோர வேண்டும்.
Advertisement
Advertisement
எதிர்காலத்தில் அவதூறு கருத்துகளை வெளியிடமாட்டோம் என உறுதிமொழி அளிக்கவேண்டும்.
மேலும் 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திமுக ஆட்சியில் 32 துறைகளை முன்னாள் துணை முதல்வர் உதயநிதியும் சபரீசனும் தலா 16 என பிரித்து வசூல் நடந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதுமட்டுமின்றி, திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து வேலை செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமாரும் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகிய இருவரும் மன்னிப்புகோர வேண்டும் என சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Sabareesan sends legal notice to Ministers Aadhav Arjuna and Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.