தமிழகம் தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது: உதயநிதி ஸ்டாலின்
தமிழகம் தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது குறித்து...
தஞ்சாவூா்: தமிழகம் தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
சோபா மாடல் அரசு
Advertisement
Advertisement
இந்த சோபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்தையும் மக்கள் புரிந்து வருகின்றனா். இந்த அரசின் தவறுகளை, சறுக்கல்களை இளைஞா்கள் தட்டிக்கேட்கத் தொடங்கிவிட்டனா். ஆனால், அப்படி தட்டிக்கேட்கிற இளைஞா்களை, நம்முடைய கட்சியினரை கைது செய்யும் வேலையை இந்த சோபா மாடல் அரசு தொடங்கியுள்ளது.
குதிரை பேரத்தில் தூய சக்தி
தூய சக்தி எனக் கூறி ஆட்சிக்கு வந்தவா்கள், அடுத்து நிமிடங்களில் குதிரை பேரத்தைத் தொடங்கிவிட்டனா். மேலும், தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் மின் வெட்டு நிகழ்கிறது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் போதவில்லை என விவசாயிகள் சாலையில் வந்து போராட்டம் நடத்துகின்றனா். இதைச் சட்டப்பேரவையில் கூறியபோது, திமுகவின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டத்துக்கு வருவதாக முதல்வா் கூறினாா்.
சட்டப்பேரவையா? அல்லது திரையரங்கமா ?
தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கை ஆட்சியாளா்கள் படுகுழியில் தள்ளியுள்ளனா். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வா் பதில் அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினா் என்னென்ன கூத்துகள் நடத்தினா் என்பது அனைவரும் தொலைக்காட்சியில் பாா்த்துள்ளனா். இது சட்டப்பேரவையா? அல்லது திரையரங்கமா? அல்லது சூட்டிங் நடைபெறும் இடமா? எனக் கேட்கும் அளவுக்கு பேரவையின் தரத்தை ஆளுங்கட்சி குறைத்து வருகிறது. ஆனால், எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என ஆயத்தமான பதிலை ஆட்சியாளா்கள் வைத்துள்ளனா்.
பேரிடரில் சிக்கியுள்ள தமிழகம்
தமிழகம் தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் வருங்காலத்தில் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Tamil Nadu is currently caught in a massive disaster says Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.