முகப்பு
தமிழ்நாடு

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே கட்சிப் பெயரை இன்று அறிவிக்கிறாரா முக்கிய பிரபலம்?

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே புதிய கட்சித் தொடங்கிய சசிகலா கட்சிப் பெயரை இன்று அறிவிக்கிறாரா என்பது பற்றி..

Updated On : 13 மார்ச், 2026 at 11:30 AM
கட்சிக் கொடியை அறிமுகம் செய்த சசிகலா - படம் - யூடியூப்
பகிர்:

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ஆம் தேதி அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நலனுக்காக புதிய கட்சியைத் தொடங்குகிறேன் எனக் கூறி, அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில், பரபரப்பைக் கூட்டியிருந்தார் சசிகலா. இந்த நிலையில், இன்னமும் கட்சியின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்ற பெயரில் சசிகலா தலைமையில் பிப். 24ஆம் தேதி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியின், நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றிருந்தன.

Advertisement

மாநாட்டில் சசிகலா பேசும்போது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின. முதல்வராக உட்கார வைத்தவர் என் முதுகில் குத்தினார். கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்றனர். தேர்தல்களில் தொடர்ந்து 10 முறை தோல்வியை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.

9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது. இனியும் அமைதியாக இருந்தால் அது தொண்டர்கள், மக்களுக்கு செய்யும் துரோகம்.

மக்கள் நலனுக்காக புதிய கட்சியை அறிவிக்கிறேன். எனது புதிய கட்சி அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்.

கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை. களம் காண்போம். நம் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம் எனக் குறிப்பிட்டு கொடியை அறிமுகம் செய்திருந்தார்.

இந்த நிலையில், மார்ச் 10ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்துப் பேசியிருந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்ற சசிகலா, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இருவரும் சேர்ந்து திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைப்பது குறித்துப் பேசியதாவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.

summary

Regarding whether Sasikala, who has launched a new party amidst political turmoil, will announce the name of the party today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.