புதிய கட்சித் தொடங்குகிறார் அண்ணாமலை? இன்று தில்லி பயணம்!
அண்ணாமலை புதிய கட்சித் தொடங்குவதாக வெளியாகும் தகவல் பற்றி...
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இன்று தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வரவேற்பை பெற்றிருந்தார்.
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், மாநிலத் தலைவர் பதவியிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவுக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில், பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை.
பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், அண்ணாமலை பிறந்த நாளான ஜூன் 4 ஆம் தேதி, மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, சென்னையில் இருந்து தில்லி பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.
மாற்று அரசியலை நோக்கி தமிழ்நாடு மக்கள் நகர்ந்திருக்கும் நிலையில், இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவுள்ள அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்கவுள்ள தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கோவையில், அண்ணாமலை புகைப்படத்துடன், "பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது" வாசகத்துடன் "தீரன் அண்ணாமலை படை" எனக் குறிப்பிடப்பட்டிருந்த சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.