அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து, மாநிலத்தை அழித்து விடும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேச்சு
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து, மாநிலத்தை அழித்து விடும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "அதிமுகவை பொருத்தவரையில், அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையேயான தேர்தல் என்று முதல்வர் சொல்வது சரியே. ஏனென்றால், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுக கூட்டணி என்கிறார்.
பாஜகவினர், ஏதோவொரு விதமாக தமிழகத்தின் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தால், நம்முடைய மொழி, இனம், வரலாறு, பாரம்பரியம், அறிவியல்சார்ந்த சிந்தனைகள், எதிர்கால வளர்ச்சி என அனைத்திலும் ஒரு மோசமான பேரழிவை எதிர்கொள்ள நேரிடும்.
அவர்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சாமி என்று சொல்லும் ஒரு கோஷ்டி மட்டும்தான். அவர்கள் தில்லியிலிருந்துதான் தமிழ்நாட்டைப் பார்ப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பார்க்க மாட்டார்கள். அதனால்தான், இது தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான தேர்தல்.
பாஜகவின் வரலாறு என்னவென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியை கபளீகரம் செய்வதுடன், மாநிலத்தையும் அழித்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் இந்தளவுக்கு அதிமுகவை முழுவதுமாக பாஜக கைப்பற்றிய சூழல் எப்போதும் இருந்ததில்லை. இது தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் தீர்மானிக்கக் கூடிய தேர்தல்.
விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடக்கியிருக்கிறார். அவர் ஒரு பிரபலமான நடிகரும்கூட. ஒருசில இளைஞர்களிடையே அவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் கிடைக்கும். ஆனால், இந்தியா கூட்டணிதான் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை வராது" என்று தெரிவித்தார்.