முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்!

ஏறத்தாழ 59 ஆண்டுகால தேர்தல் அரசியலில் தோல்வியே காணாமல் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுபெற்ற திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்...

Updated On : 21 மார்ச் 2026, 12:34 pm IST
முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பல சுவாரசியங்கள் நிறைந்தது. தொகுதிக்கு நேரில் பிரசாரத்துக்கு வராதவர் அமோகமாக வெற்றி பெற்றது. தோல்வியே காணாதவர் என்ற பெருமைக்குரியவர் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது, பிற்காலத்தில் தமிழகத்தின் முதல்வரானவர் முதல் தேர்தலிலேயே தோல்வியைத் தழுவியது என இந்தத் தேர்தலில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்தன.

கடந்த 1984-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தது ஆகியவற்றால் அப்போது ஏற்பட்டிருந்த அனுதாப அலையில் இந்தத் தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

155 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 132 தொகுதிகளில் வென்றது. 167 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தேனி மாவட்டத்துக்குள்பட்ட ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

Advertisement

அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் வேட்பு மனு தாக்கல் வாக்குச் சேகரிப்பு என எந்த நிகழ்வுக்கும் அவரால் ஆண்டிபட்டிக்கு வர இயலவில்லை. இருப்பினும், எம்.ஜி.ஆர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 32,304 வாக்குகள் அதிகம் பெற்று, அமோக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு, படுத்துக் கொண்டே வென்றவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது.

களம் காணாத கருணாநிதி..

இதேபோல, ஏறத்தாழ 59 ஆண்டுகால தேர்தல் அரசியலில் தோல்வியே காணாமல் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுபெற்ற திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல் இதுதான்.

1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்த கருணாநிதி, இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்கத் தவறிய மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டிப்பதாகக் கூறி, 1983-ஆம் ஆண்டில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பிறகு, திமுக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க கருணாநிதி சட்ட மேலவை உறுப்பினரானார். இந்த நிலையில், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் அவர் போட்டியிடுவதைத் தவிர்த்தார்.

இந்திரா காந்தி மறைவு, எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக் குறைவு ஆகியவற்றால் காங்கிரஸ், அதிமுகவுக்கு பெரும் அனுதாப அலை வீசிய நிலையில், கருணாநிதியின் இந்த முடிவு அவரது சிறந்ததொரு அரசியல் உத்தியாக அப்போது பேசப்பட்டது.

முதல்வர்களின் முதலும், இறுதியும்...

1975-ஆம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழக மக்களிடையே கவனம் பெற்று, 1980-ஆம் ஆண்டு திமுக இளைஞரணியை உருவாக்கிய மு.க.ஸ்டாலின் அந்தக் கட்சி சார்பில் முதல்முறையாக தேர்தல் அரசியலில் களமிறக்கப்பட்டது 1984 சட்டப் பேரவைத் தேர்தலில்தான். ஆனால், அவரது முதல் முயற்சிக்கு தோல்வியே கிடைத்தது. இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் அவர் தோல்வியடைந்தார். 1984 சட்டப்பேரவைத் தேர்தல் மு.க.ஸ்டாலினுக்கு முதல் தேர்தல் களமாக இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு இறுதித் தேர்தல் களமாக அமைந்துவிட்டது.

summary

The only election Former Chief Minister Karunanidhi will not contest!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.