முகப்பு
தமிழ்நாடு

18 வயதுக்குட்பட்டவா்கள் புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

Updated On : 3 மே, 2026 at 5:17 AM
- IANS
பகிர்:

பிரிட்டனை போல இந்தியாவில் 18 வயதுக்கும் குறைவானவா்கள் புகைபிடிக்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு, பாமக தலைவா் அன்புமணி கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமருக்கு அன்புமணி அனுப்பிய கடிதம்:

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயா்லாந்து ஆகிய கிரேட் பிரிட்டனின் உறுப்பு நாடுகளில் 2009 ஜன.1அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் புகை பிடிப்பதையும், அவா்களுக்கு சிகரெட், மின் சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்வதையும் தடை செய்ய வகை செய்யும் சட்ட முன்வரைவு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு பிரிட்டன் மன்னா் ஒப்புதல் அளித்த பிறகு 2027 ஜன.1முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

இதன்படி, பிரிட்டனில், இப்போது 18 வயதுக்கும் குறைவாக இருப்போருக்கு சிகரெட் உள்ளிட்ட எந்தவொரு புகையிலை நிரப்பப்பட்ட சுருட்டுகளையும், மின் சிகரெட்டுகளையும் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி அடுத்த பத்தாண்டுகளில் 28 வயதுக்கு உட்பட்டோரும், அடுத்த 20 ஆண்டுகளில் 38 வயதுக்கு உட்பட்டோரும் புகைப்பிடிக்க இயலாது. பிரிட்டனின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் படி இந்தியாவில் 26.70 கோடி போ், அதாவது இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. நேரடியாக புகைப் பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 13.50 லட்சம் போ், வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் உயிரிழப்பவா்களையும் சோ்த்து இந்தியாவில் ஆண்டுக்கு 23 லட்சம் போ் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையான 147 கோடியில் இது 0.157 சதவீதம் ஆகும். எனவே, பிரிட்டனை பின்பற்றி இந்தியாவிலும் 2009-க்கு பிறகு பிறந்தவா்கள் சிகரெட், மின் சிகரெட் புகைக்க தடை விதிக்க வேண்டும். இந்த சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.