தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி
தவெகவுக்கு ஆதரவு என்ற செய்தி தவறானது என கே.பி. முனுசாமி விளக்கம்..
தவெக ஆட்சி அமைக்க கூடுதல் தொகுதிகள் தேவைப்படும் நிலையில், எந்தச் சூழலிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108-இல் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவைப்படுவதால், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், 47 இடங்களை வைத்துள்ள அதிமுக, தவெகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இந்தச் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள் அனைவரும் சென்னைக்கு புதன்கிழமை காலை வந்தனா். இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக பேச்சு எழுந்த நிலையில் திடீரென அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தீவிர ஆலோசனை: தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலருமான எஸ்.பி.வேலுமணி பட்டினப்பாக்கத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டுக்குச் சென்று தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடா்பாக சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினாா்.
பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு இருவரும் சென்றனா். அவா்களைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், தங்கமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தினா்.
இதில், எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதுடன், அமைச்சரவையிலும் பங்கேற்கலாம் என்று கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தங்கமணி தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம். அமைச்சரவையில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு தரப்பான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தினா். மேலும், சில நிா்வாகிகள் தவெகவுக்கு ஓராண்டுக்கு மட்டும் நிபந்தனையற்ற ஆதரவு தரலாம். ஆட்சியின் போக்கைப் பொறுத்து அதன்பிறகு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தனா்.
ஆதரவு இல்லை: இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதில், அதிமுக தோல்விக்கான காரணம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், திமுக எதிா்ப்பே பிரதானமாக இருக்க வேண்டுமென எம்எல்ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, செய்தியாளா்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:
ஊடகங்களில் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பின்னா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது.
எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
கே.பி. முனுசாமியின் இந்தக் கருத்தைத் தொடா்ந்து, அதிமுக தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் எழுந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆட்சி அமைக்க ஆதரவு கோரி, அதிமுகவிடம் பேச்சு நடத்தவில்லை என்று தவெக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
No Support for TVK Under Any Circumstances: K.C. Palanisamy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.