தவெகவுக்கு ஆதரவா? அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை!
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் இபிஎஸ்.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 4) வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது.
அதில், 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இந்தத் தோல்வியில் இருந்து அதிமுக பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைப் பிடித்த தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.
இந்தச் சூழலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று(மே 6) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடைந்ததற்கான காரணம், முன்னாள் அமைச்சர்கள் பலரின் தோல்வி, உள்கட்சி பிரச்னைகள், வாக்கு சதவீதம் குறைந்தது, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி வருவதாக இன்று காலைமுதல் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
AIADMK General Secretary Edappadi Palaniswami is holding consultations with the party's MLAs regarding extending support to the TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.