தவெகவுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பதில்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5) நேற்று ஆதரவு அளித்தது. மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் இரண்டாவது முறையாக ஆளுநரை இன்று சந்தித்துள்ளார். அப்போது போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவைக் கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது. மூன்று கட்சிகளின் தலைவர்களும் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
தொடர்ந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதையை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் முடிவுகள், சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்துப் பேசினோம். தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை.
தவெக ஆதரவு கேட்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். ஆலோசனைக் கூட்டம் எப்போது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை காலை நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கின்றன.
நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்.
தமிழகத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவளித்ததால் பாஜக ஆளுநர் மூலமாக நெருக்கடி கொடுக்கிறது" என்றார்.