தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி
முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்....
தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதல்வர் விஜய்க்கு நம்பிக்கை இல்லையா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள் என்றும் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
Advertisement
Advertisement
"இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும்.
'ஆறு மாதம்கூட விமர்சனம் செய்யாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?' என்று, ஏற்கனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, 'ஆட்சியைக் கவிழ்க்க சதியா?' என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் ஏற்கனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.கழகம் பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள்? டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜிநாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.
இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார். உதவி என்று கேட்டபோது அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம், இதைப் பற்றிப் கேட்கும்போது, தர்மசங்கடத்தில் தவிக்கிறார்கள்.
ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத்தான் வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளும் இவர்களது வெற்றிக்காக உழைக்கிறார்கள். இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ரிசைன் செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் எம்எல்ஏ-க்கள் ரிசைன் செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா, வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?" என்றார்.